செய்திகள்
கொலை

சேலம் அருகே குடிபோதையில் மகனை வெட்டி கொன்ற தந்தை

Published On 2021-04-02 08:48 GMT   |   Update On 2021-04-02 08:48 GMT
குடிப்பதற்கு பணம் கேட்டதால் ஆத்திரத்தில் தந்தை மகனை வெட்டி கொன்ற சம்பவம் எல்லைகுட்டையூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி குட்டப்பட்டி கிராமம் எல்லைகுட்டையூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 65). இவருடைய மனைவி மாது. இவர்களது மகன் கலையரசன் (38).

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மாது கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மணியும், அவரது மகன் கலையரசனும் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர். தந்தைக்கும், மகனுக்கும் குடிப்பழக்கம் உண்டு. இதனால் இருவரும் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்வதாக கூறப்படுகிறது.

நேற்று கலையரசன், மணியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு மணி, பணம் தர முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரும் மாறி, மாறி கடுமையாக சண்டை போட்டனர்.

மகன் குடிப்பதற்கு பணம் கேட்டு தினமும் சண்டை போடுவதால் கவலை அடைந்த மணி , கலையரசனை தீர்த்துக்கட்டி விட்டால் இனிமேல் சண்டை நிகழாது என கருதினார்.

வழக்கம்போல் நேற்று மணி, மது வாங்கி குடித்தார். போதை தலைக்கேறியது. இதையடுத்து இரவு 9 மணி அளவில் அவர் வீட்டுக்கு வந்தார். கலையரசன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார்.

குடிபோதையில் அங்கு வந்த மணி, அவரை கொடுவாளால் மார்பிலும், தாடையிலும் சரமாரியாக வெட்டினார்.இதில் கலையரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கலையரசன் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கலையரசனுக்கு இளமதி என்ற மனைவியும், மோஷிகா (8), நித்தியஸ்ரீ (7), மதுமிதா (2) என 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கலையரசன் அடிக்கடி குடித்துவிட்டு இளமதியிடம் தகராறு செய்து கொண்டிருந்ததால் இளமதி தனது தாயார் வீட்டிற்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்று விட்டார்.

கணவர் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டதும் இளமதி மற்றும் குழந்தைகள், ஆஸ்பத்திரிக்கு வந்து கலையரசன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

குடிப்பதற்கு பணம் கேட்டதால் ஆத்திரத்தில் தந்தை மகனை வெட்டி கொன்ற சம்பவம் எல்லைகுட்டையூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News