ஆன்மிகம்
தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-10-19 02:15 GMT   |   Update On 2020-10-19 02:15 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலையில் அர்ச்சகர் கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு கோவிலைச் சுற்றி வலம் வந்தார்.

தொடர்ந்து காலை 10.45 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி, ஓம் சக்தி முத்தாரம்மன்’ என்று பக்தி கோஷங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் எளிமையாக நடந்தது. கோவிலில் விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், சாமி தரிசனம் செய்தார்.

தசரா திருவிழா கொடியேற்றத்துக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்கும் வகையில், குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் சோதனைச்சாவடி அமைத்து ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் உள்ளூர் பக்தர்களும் அனுமதிக்கப்படவில்லை.

வழக்கமாக கோவிலில் கொடியேற்றப்பட்டதும், விரதம் இருந்து வரும் பக்தர்கள் காப்பு அணிந்து வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் காணிக்கை செலுத்துவார்கள். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த தசரா குழு நிர்வாகிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ம் திருவிழா வரையிலும் கோவில் அலுவலகத்தில் காப்பு பெற்று, உள்ளூரில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ம் திருநாளான வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 6 ஆயிரம் பேரும், நேரடியாக கோவிலுக்கு வரும் 2 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
Tags:    

Similar News