பரமத்திவேலூர் அருகே கார் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி பலி
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 65). இவர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் வீடு கட்டி வசித்து வருகிறார். இன்று காலை கரூர்- சேலம் நோக்கி கார் ஒன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வேகமாக வந்தது.
அப்போது சைக்கிள் ஒன்று திடீரென ரோட்டை கடக்க முயன்றது. இந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பினார். இதில் இடதுபுறமாக இருந்த கவுசல்யா வீட்டிற்குள் கார் மின்னல் வேகத்தில் புகுந்தது. இதில் கவுசல்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த பரமத்தி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் காயம் அடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பலியான கவுசல்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனார்.