செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்- ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

Published On 2021-02-09 02:42 GMT   |   Update On 2021-02-09 02:42 GMT
எம்.டெக். படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தொிவித்துள்ளது.
சென்னை:

எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய 2 பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த இரு படிப்புகளுக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசும், 49.5 சதவீத இடஒதுக்கீடு தான் வழங்க வேண்டும் என்று மத்திய அரசும் நிர்ப்பந்தம் செய்ததால், இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதை அண்ணா பல்கலைக்கழகம் கை விட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சித்ரா உள்பட 5 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.சரவணன் ஆஜராகி வாதிட்டார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயகுமார், ‘இந்த 2 பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு முறைகளை அமல்படுத்த இந்த இரு படிப்புகளிலும் கூடுதலாக 9 இடங்களை உருவாக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) ஒப்புதல் தேவை' என்று வாதிட்டார்.

அப்போது, ஏ.ஐ.சி.டி.இ. சார்பில் ஆஜரான வக்கீல் ரபுமனோகர், ‘படிப்புகளுக்கு தான் ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் வழங்குமே தவிர, மாணவர்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க தேவை இல்லை. அதை பல்கலைக்கழகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ., அண்ணா பல்கலைக்கழகதிற்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News