ஆன்மிகம்
விநாயகர்

நாளை தடைகளை அகற்றும் விநாயகர் சதுர்த்தி: விரதம் இருப்பது எப்படி?

Published On 2020-08-21 06:05 GMT   |   Update On 2020-08-21 06:05 GMT
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளை, ‘விநாயகர் சதுர்த்தி’யாகக் கொண்டாடுகிறோம்.
சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன், தன் தவத்தின் பலனாக பல வரங்களைப் பெற்றிருந்தான். அதில் ‘மனிதர்கள், விலங்குகள், ஆயுதங் களால் தனக்கு ஆபத்து நேரக்கூடாது’ என்ற வரமும் ஒன்று. இந்த கஜமுகாசுரனின் வதத்திற்கான உருவாக்கப்பட்டவரே, விநாயகர் என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை சிவபெருமான், உலக உயிர்களுக்கு படியளப்பதற்காக சென்றுவிட்டார். தனிமையில் இருந்த பார்வதிதேவி, சந்தனத்தை எடுத்து அதில் ஒரு உருவத்தை செய்தாள். அதற்கு உயிர் கொடுத்தபோது அது அழகிய பாலகனாக உருவெடுத்தது.

அந்த பாலகனை காவல் வைத்து விட்டு, நீராடுவதற்காகச் சென்றாள் பார்வதிதேவி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வந்தார். சிவனை, யார் என்று தெரியாத காரணத்தால் உள்ளே அனுமதிக்க மறுத்தான், அந்த பாலகன். தன்னுடைய இருப்பிடத்திற்குள், தன்னையே அனுமதிக்காத சிறுவனின் மீது கோபம் கொண்டார், சிவபெருமான். பாலகனுக்கும் ஈசனுக்கும் இடையே போரே மூண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பாலகனின் தலையை துண்டித்துவிட்டார், சிவபெருமான்.

அப்போது அங்கு வந்த பார்வதிதேவி, தான் உருவாக்கிய பாலகனை அழித்துவிட்டதை எண்ணி வருந்தினாள். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு தான் உயிர் கொடுப்பதாக சிவபெருமான் உறுதியளித்தார். அதன்படி பூத கணங் களிடம், ‘வடக்கில் தலை வைத்திருக்கும் உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார். அதன்படி கிடைத்த யானையின் தலையை, அந்த பாலகனுக்குப் பொருத்தினார். மேலும் அவனை வழிபட்ட பிறகே பிற தெய்வங் களை வணங்க வேண்டும் என்றும், அவனை வழிபடுபவர்களுக்கு காரியத் தடைகள் அகலும் என்றும் அருளினார்.

விநாயகர் என்பதற்கு, ‘தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று பொருள். யானைத் தலை வந்ததை அடுத்து, ஒரு ஆவணி மாத சதுர்த்தி நாளில், கஜமுகாசுரனை அழிக்க விநாயகர் அனுப்பி வைக்கப்பட்டார். கஜமுகாசுரனுக்கும், விநாயகருக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதையே அந்த அசுரனை அழிக்க ஏவினார், விநாயகர். அதனால் அந்த அசுரனின் அகந்தை அழிந்தது. அவன் மிகப்பெரிய மூஞ்சுறு எலியாக உருவெடுத்தான். விநாயகர், அதனை தன்னுடைய வாகனமாக மாற்றிக்கொண்டார்.அன்று முதல் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வேறு சில கதைக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இருப்பினும் இன்றைய தினத்தில் விநாயகரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பதுஐதீகம்.

விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளை, ‘விநாயகர் சதுர்த்தி’யாகக் கொண்டாடுகிறோம். பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது என்பது இதன் சிறப்பை எடுத்துரைப்பதாகும். விநாயகர் சதுர்த்திஅன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் கோலமிட வேண்டும். விநாயகர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அதன் முன்பாக தலைவாழை இலை ஒன்றை விரித்து வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின் மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள். களிமண்ணால் செய்த பிள்ளையார் தான் விசேஷம். அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றை பிள்ளையாருக்கு சாத்துங்கள்.

பின் சந்தனம், குங்குமம் வைத்து விளக்கேற்றி, தூப- தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யுங்கள். அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில் இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை ஆற்றிலோ, கடலிலோ கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
Tags:    

Similar News