செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் தெருநாய்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஜெயங்கொண்டத்தில் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர பகுதி சாலைகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்தநாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்தி செல்வதாலும், ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே செல்வதாலும் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது.
சிலசமயங்களில் பெற்றோர்களுடன் நடந்து செல்லும் குழந்தைகளையும் துரத்தி கடித்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது. முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு நாயை மட்டுமே வளர்த்து அதனை முறையாக பராமரித்து வந்தனர். தற்பொழுது ஒரு விட்டுக்கு 5-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கும் பட்சத்தில் அந்த நாய்களுக்கு உணவு அளிக்காமல் தெருக்களில் திரிய விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த நாய்கள் சாலையில் பல்வேறு இடங்களில் உணவுக்காக சுற்றித்திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் உணவுக்காக ஒன்றை ஒன்று கடித்துக்கொள்வதால் சொறி நாய்களாக உருவெடுத்து அது காலப்போக்கில் வெறி நாய்களாக மாறி விடுகிறது. அந்த நாய்கள் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தெரு மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும், கோரிக்கை விடுத்துள்ளனர்.