செய்திகள்
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசு

Published On 2020-01-16 12:14 GMT   |   Update On 2020-01-16 12:14 GMT
மதுரை பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலையில் நிறைவடைந்தது. அதில், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன. 

மாட்டுப்பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 9 சுற்றுகளில் 655 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், 16 காளைகளை பிடித்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய ராஜா இரண்டாம் இடமும், 10 காளைகளை அடக்கிய கார்த்திக் 3-ம் இடமும் பிடித்தார். இருவருக்கும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதேபோல், முதல் பரிசு வென்ற காளை உரிமையாளருக்கு காங்கேயம் பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாம் பரிசு வென்ற காளையின் உரிமையாளர்க்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
Tags:    

Similar News