அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வேறு யாரையும் அனுமதிக்க இயலாது: இபிஎஸ்-ஓபிஎஸ்
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாது:-
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எம்.எல்.ஏ. ஐ.டி. கார்டுடன் (அடையாள அட்டை) தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வருகிற 14-ந்தேதி அன்று தலைமை கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பதால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் தலைமை கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தலைமைக்கழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.