ஆன்மிகம்
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோ பூஜை செய்தபோது எடுத்தபடம்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருப்பணி: திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்

Published On 2021-11-22 05:00 GMT   |   Update On 2021-11-22 05:00 GMT
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் தேவாரப்பாடல் பெற்ற மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. பல்வேறு சிறப்பு பெற்ற மயூரநாதர் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

அதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோ பூஜை, கஜ பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கோவில் கொடிமரத்து மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் மங்கல வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலின் ஈசானிய மூலையில் திருப்பணிக்கான பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் அடிக்கல் நாட்டினார்.

இதில் திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண தம்பிரான், அருணாச்சல தம்பிரான், வேலப்ப தம்பிரான், ராமலிங்க சுவாமிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், வக்கீல் ராஜேந்திரன், டாக்டர்கள் ராஜசேகர், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பணி தொடக்க நிகழ்ச்சி பூஜைகளை சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் திருமாறன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News