அருப்புக்கோட்டையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு - பஞ்சாயத்து தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்பு சித்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி என்ற மூக்கையா (வயது37), விவசாயி.
இவருக்கும், கொப்பு சித்தம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயசந்தருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று இரவு ராமமூர்த்தி சாலையில் நடந்து சென்றபோது 4 பேர் கும்பல் வழிமறித்தது. அவர்கள் சுற்றிவளைத்து ராமுமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். அக்கம் பக்கத்தினர் ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பந்தல்குடி போலீசில் ராமமூர்த்தி புகார் செய்தார். அதில், பஞ்சாயத்து தலைவர் ஜெயசந்தர் உள்பட 4 பேர் வழி மறித்து தன்னை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஜெயசந்தர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.