ஆன்மிகம்
நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதையும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்

Published On 2019-08-19 04:15 GMT   |   Update On 2019-08-19 04:15 GMT
ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.
நாக வழிபாட்டுக்கு சிறந்த ஸ்தலமாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திகழ்கிறது. இங்கு மூலவரான நாகராஜா வீற்றிருக்கும் இடத்தின் மேற்பகுதி ஓலையால் வேயப்பட்டு இருப்பதும், பக்தர்களுக்கு பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுவதும் கோவிலுக்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

நாகராஜா கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்புடையதாகும். ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதே போல ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்தனர்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. ஆனால் கோவில் நடை திறப்பதற்கு முன்னதாகவே பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனர்.

கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் வைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தார்கள். பின்னர் நாகர் சிலைகளுக்கு மத்தியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜர் சன்னதிக்கு புறப்பட்டனர். நாகராஜரை வழிபட்டதும் சிவன், அனந்தகிருஷ்ணர், துர்க்கை அம்மன், முருகன் ஆகிய சாமிகளையும் வணங்கினர்.

தரிசன கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு ஒரு லிட்டர் பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு மற்றும் பழம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
Tags:    

Similar News