செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கைது

Published On 2021-03-19 10:51 GMT   |   Update On 2021-03-19 10:51 GMT
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 32) விவசாயி. இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு சங்கீதா (9) என்ற மகளும், நிஷாந்த் (7) என்ற மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனோகரனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமேஸ்வரி (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

வீலிநாயக்கன்பட்டியில் உள்ள ராமேஸ்வரியின் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனோகரன் தனது மனைவியை கத்தியால் குத்தினார்

இதில் ரத்தவெள்ளத்தில் ராமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றினர்.

மனோகரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரிக்கு சொந்தமான இடத்தில் நான் வீடு கட்டியுள்ளேன். இதனால் அந்த இடத்தை எனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டேன். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை. மேலும் ராமேஸ்வரி அடிக்கடி வெளியாட்களுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். இதனை நான் தட்டிக் கேட்டபோது, எங்களுக்குள் தகராறு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்து அவரை குத்திக் கொன்றேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News