செய்திகள்

மோடி இந்தியாவின் பிரிவினை தலைவர்- டைம் இதழ் கட்டுரையில் தகவல்

Published On 2019-05-11 06:58 GMT   |   Update On 2019-05-11 06:58 GMT
எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றாததால் இந்தியாவின் பிரிவினை தலைவர் என்று‘டைம்’ இதழ் கட்டுரையில் தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி:

அமெரிக்காவில் இருந்து உலகப் புகழ் பெற்ற “டைம்” வார இதழ் வெளி வருகிறது. இந்த வார இதழுக்கு ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், தெற்கு பசிபிக் நாடுகள் என உலகின் பல பகுதிகளிலும் பதிப்புகள் உள்ளன.

‘டைம்‘ வார இதழின் அட்டையில் படமும், அது தொடர்பான கட்டுரையும் இடம் பெறுவதை பிரபலங்கள் கவுரவமாக கருதுகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி வெளியான டைம் வார இதழில் அட்டைப் படத்தில் மோடி இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் வரும் 20-ந்தேதியிடப்பட்ட டைம் இதழின் சர்வதேச பதிப்பில் பிரதமர் மோடி படம் இடம் பிடித்துள்ளது.

மோடி படம் அருகே “இந்தியப் பிரிவினையின் தலைவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இதழில் மோடி பற்றி இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.

மோடியை கடுமையாக விமர்சித்து, குறை கூறி பாகிஸ்தான் அரசியல்வாதியான சல்மான் தசீர் என்பவரின் மகன் ஆதிஷ் தசீர் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். மோடியை புகழ்ந்து இயன் பிரெம்மர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

ஆதிஷ் தசீர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் மோடி பிரதமர் ஆன பிறகு மத ரீதியிலான தேசியவாதம் வளரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் தங்களிடையே உள்ள வேறுபாடுகள் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

அனைவருக்குமான வளர்ச்சி என்ற நிலை மாறி உள்ளது. இதனால் பிரிவினையின் தலைவராக மோடி முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு தேர்தலின் போது வேலைவாய்ப்பு பிரச்சினையை முன் நிறுத்தி பிரசாரம் செய்து மோடி வெற்றி பெற்றார். ஆனால் அவரால் அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற இயலவில்லை.

மோடி பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவும் நிறைய வாக்குறுதிகள் அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி மீது மக்களிடம் அதிருப்தி உள்ளது. இதை பயன்படுத்தி ராகுலால் வெற்றி பெற இயலவில்லை. தனித்து நின்று அவரால் மோடியை எதிர்க்க இயலவில்லை.


இதனால் ராகுலுக்கு துணையாக அவரது சகோதரி பிரியங்கா வந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் வேறு யோசனைகள் இல்லை. வாரிசு அரசியலை ஊக்குவிப்பதைத் தவிர காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை.

மோடியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இந்தியாவில் எதிரணி பலவீனமாக உள்ளது. இதுதான் மோடிக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக இருக்கிறது.

மோடி கடந்த 5 ஆண்டுகளில் எந்த புதிய முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. அவர் ஆட்சி மீண்டும் வருமா?

இவ்வாறு அந்த கட்டுரையில் ஆதிஷ் தசீர் எழுதியுள்ளார்.

இயன் பிரெம்மர் எழுதியுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி தனது 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு பொருளாதார சீர் திருத்தங்களை செய்துள்ளார். இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்துள்ளது.

இந்தியாவில் மேலும் பல்வேறு பொருளாதார சீர் திருத்தங்கள் தேவைப்படுகிறது. அந்த பொருளாதார சீர்திருத்தங்களை மோடியால் மட்டுமே செய்ய முடியும்.

மோடி வெளிநாடுகளுக்கு செல்வதை சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். ஆனால் அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் நிறைய வெற்றிகளை இந்தியாவுக்கு தேடி கொடுத்துள்ளது. இந்திய பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் செல்ல வழி வகுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்பட பல நாடுகளுடன் இந்தியாவின் உறவில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி வசூல் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அரசுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஆதார் அட்டை எண், பல்வேறு சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேலும் சில சீர்திருத்தங்களும் தேவைப்படுகிறது.

மோடியால் மட்டுமே அந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியும். ஏனெனில் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. குறிப்பாக மோடி மீது ஊழல் புகார்கள் எதுவும் இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் திட்டங்கள் ஏழை- எளிய மக்களை சென்றடைந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தும் அளவுக்கு மாறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் இந்த திட்டம் சாமானிய மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் மோடியை பாதிக்கும் வகையில் இல்லை.

இவ்வாறு அந்த கட்டுரையில் இயன் பிரெம்மர் எழுதி உள்ளார்.

Tags:    

Similar News