செய்திகள்
பார் உரிமையாளரின் காதை கடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருப்பூரில் முன்விரோத தகராறில் பார் உரிமையாளர் காதை கடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அனுப்பர்பாளையம்:
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை அடுத்த சாலைகிராமம் பகுதியை சேர்ந்தவர் வீரபிரபு என்ற குட்டி (வயது 33). இவர் திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார்.
இந்த பாரை ஏலம் எடுப்பது தொடர்பாக குட்டியின் சொந்த ஊரை சேர்ந்த ராஜா என்பவருக்கும், குட்டிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி அதிகாலை போயம்பாளையம் அருகே உள்ள ஒரு பேக்கரி முன்பு குட்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ராஜா மற்றும் அவருடைய நண்பர்களான பிரபு, முத்து, காளி, தனபால், தினேஷ்பாபு, தமிழ்செல்வன் ஆகியோர் சேர்ந்து குட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் குட்டியின் 2 காதுகளையும் ராஜா, காளி ஆகியோர் கடித்து துப்பி உள்ளனர்
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் தனபால், தினேஷ்பாபு, தமிழ்செல்வன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காளியை (48) போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.