செய்திகள்
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

தக்காளி விலை உயர்வு: அரசு நடவடிக்கை என்ன? - அமைச்சர் விளக்கம்

Published On 2021-11-24 14:46 GMT   |   Update On 2021-11-24 14:46 GMT
தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சென்னை:

பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ 85 முதல் 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.

இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி, தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி வருகிறார்கள். 

இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.



இதனிடையே தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்

இந்தநிலையில்,  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோயம்பேடு சந்தைக்கு 620 டன் தக்காளி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் தக்காளி அதிகம் விலையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  அறுவடை செய்யப்பட்ட தக்காளியை தமிழகம் கொண்டு வருவதில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான். விரைவில் விலை குறையும், நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News