செய்திகள்
திருக்கோவிலூர் அருகே பொக்லைன் எந்திரம் திருட்டு
திருக்கோவிலூர் அருகே பொக்லைன் எந்திரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே திருப்பனையூர் தர்கா கிராமத்துக்கும், சின்னமணியந்தல் கிராமத்திற்கும் இடையே உள்ள தார் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தை அதன் டிரைவர் முருகன், அதே கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மறுநாள் வந்து பார்த்தபோது பொக்லைன் எந்திரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், பொக்லைன் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் பொக்லைன் எந்திரத்தை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பொக்லைன் எந்திரம், கல்வராயன்மலை பகுதியில் உள்ள பன்னிப்பாடி கிராமத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மீட்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை திருடியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.