செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் 3-வது கட்டமாக 372 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் 3-வது கட்டமாக 372 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினை தடுக்க தடுப்பூசி ஒன்று தான் சிறந்தது என்பதால் கடந்த 12-ந் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 3-வது கட்டமாக நேற்று 372 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை சுகாதார பணிகள், மருத்துவ பணிகள், ஊரக வளர்ச்சித்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. இதில் திருவாரூர் நகராட்சி பகுதியில் பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் தடுப்பூசி எந்தவித பற்றாக்குறையின்றி பொதுமக்களுக்கு செலுத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஒவ்வொரு பகுதியிலும் தேவைக்கு ஏற்ப அடுத்த பகுதியில் நகர்வு செய்திடவும், தடுப்பூசி முகாம் முழுமையாக மக்களுக்கு சென்று அடைந்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து திருவாரூர் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பார்வையிட்டார். அதுசமயம் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஹேமசந்திராகாந்தி, தாசில்தார் தனசேகரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி கிராமங்களில், ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஊராட்சி கிராமங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். டாக்டர்கள், கிராம செவிலியர் அடங்கிய குழுவினர் முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை போடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 60 சதவீதம் தடு்ப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். வலங்கைமான் ஒன்றிய ஆணையர்கள் ஆறுமுகம், பொற்செல்வி ஆகியோர் தடுப்பூசி முகாம் நடந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். பின்னா் இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி, 100 சதவீதம் தடு்ப்பூசிகள் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஊராட்சி நி்ா்வாகத்திற்கு அறிவுறுத்தினா். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.