செய்திகள்
சரவணன்- ரம்யா

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொலை- தொழிலாளி வெறிச்செயல்

Published On 2020-09-26 09:14 GMT   |   Update On 2020-09-26 09:14 GMT
திருச்செந்தூர் அருகே நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வள்ளிவிளையை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர், சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரும், ஆழ்வார்திருநகரி அருகே மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த ரம்யாவும்(21) காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு சிவபார்வதி(4½) என்ற மகளும், கணேஷ்(2½) என்ற மகனும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, சரவணன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர்கள், தெற்கு ஆத்தூர் நாடார் தெருவில் வாடகை வீட்டில் வசித்தனர். 

சரவணன் கூலிவேலைக்கு சென்று வந்தார். சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அவர் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் குழந்தைகளுடன் தூங்கினர். தொடர்ந்து அதிகாலையிலும் சரவணனுக்கும், ரம்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரவணன், மனைவி ரம்யா அணிந்து இருந்த சேலையாலே அவரது கழுத்தை இறுக்கி நெரித்தார். 

பின்னர் அவரை இழுத்து சென்று, வீட்டின் பின்பக்கத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் அவரது தலையை அமுக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறிய ரம்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்.
Tags:    

Similar News