ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

Published On 2020-01-02 06:48 GMT   |   Update On 2020-01-02 06:48 GMT
நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு தாமிரசபையில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. காலை 7.30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் பெரியசபாபதி சன்னதி முன்பு தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது. 4-ம் திருவிழாவான 4-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்மாள் வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திக ளுடன் வீதி உலா வருதல் நடக்கிறது.

9-ம் திருவிழாவான 9-ந் தேதி இரவு முழுவதும் தாமிரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, 10-ம் திருவிழாவான 10-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு தாமிரசபை முன்பு உள்ள கூத்தபிரான் சன்னதி முன்பு பசு தீபாராதனை நடக்கிறது. 4 மணி முதல் 5 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

இதேபோல் நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் சுவாமிக்கு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

காலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகமும், 5.30 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடக்கின்றன. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், இரவு 7.30 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந் தருளுகிறார். விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சதுர்வேத பாராயணமும், திருவெம்பாவை பாராயணமும், நீராஞ்சன தீபாராதனையும், நடன தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராம்குமார், தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News