செய்திகள்
டவ்-தே புயல்: குஜராத்தில் 1.5 லட்சம் பேரை இடமாற்றம் செய்ய முடிவு
மருத்துவ ஆக்சிஜன் 8 உற்பத்தி பிரிவுகளில் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளையும், நாளை மறுநாளும் தடுப்பூசி பணிகளை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
வதோதரா:
கோவா கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ள டவ்தே புயல், நாளை மறுநாள் (18ந்தேதி) அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனை முன்னிட்டு குஜராத் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலால் மின் வினியோக பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது. அதனால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் பேக்-அப் வசதியை உறுதி செய்ய வேண்டும் என முதல் மந்திரி விஜய் ரூபானி புயல் மறுஆய்வு கூட்டத்திற்கு பின்னர் கூறியுள்ளார்.
மருத்துவ ஆக்சிஜன் 8 உற்பத்தி பிரிவுகளில் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளையும், நாளை மறுநாளும் தடுப்பூசி பணிகளை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
புயலால் ஏற்படும் அவசரகால பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்திடுவார்கள். கடலோர பகுதியில் உள்ள 1.5 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என கூறியுள்ளார்.