செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது

Published On 2021-11-25 11:24 GMT   |   Update On 2021-11-25 11:24 GMT
வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் காவல் சரகத்திற்கு உட்பட்ட துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த சாவித்திரி (வயது 50) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய அவருக்கு உரிமை உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உப்பனாறு மேல்கரை வழியாக செல்வதற்கு உள்ள பாதை சுனாமி காலத்தில் இருந்து உடைப்பு ஏற்பட்டு சாலை வசதி இல்லாமல் போய்விட்டது.

இதை சரி செய்ய பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்று வரை நடைபெறவில்லை. இதனால் அந்த உடலை ரோட்டிலேயே வைத்து தகனம் செய்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள், இதுகுறித்து தோப்புத்துறை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் (54) என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று மாற்று வழியில் உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய சென்றுள்ளார். 

அப்போது குடிபோதையில் இருந்த துள்ளு வெட்டி அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (26) என்பவர் கிராம நிர்வாக அதிகாரியை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததோடு, உயர் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். 

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இறந்தவர் உடலை மாற்று பாதையில் எடுத்துச் சென்று தகனம் செய்வதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News