உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே சங்க அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு 2 வாலிபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
குலசேகரம் அருகே சங்க அலுவலகத்தில் குண்டு வீசிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குலசேகரம் அருகே அண்டூர் புல்லை என்ற இடத்தில் என்.எஸ்.எஸ். கரயோகம் எனப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டி அலுவலகம் உள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அலுவலகத்தில் அந்த அமைப்பின் தலை வர் டாக்டர் கிருஷ்ண பிரசாத், செயலாளர் ராஜீ, பொருளாளர் ரவி ஆகியோர் அமைப்பின் மாதந்திர கணக்குகளை பார்த்து கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று அலுவலக வாசலில் நாட்டு வெடிகுண்டு வெடித்து புகை மண்டலமாக காணப்பட்டது. வெடி பொருள்களின் துகள்கள் அலுவலகத்தில் விழுந்தது. உடனே அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றனர் உடனே அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர்.
இதுகுறித்து நேற்று இரவு சங்கத்தின் தலைவர் கிருஷ்ண பிரசாத் தலைமையில் சுமார் 50 பேர் திரண்டு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் குலசேகரம் இன்ஸ்பெக்டர் உமா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் அக்கம் பக்கத்தினரிடமும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு ஏதாவது முன்விரோதம் காரணமா? என்றும் அலுவலகத்தின் மீது வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதாவது பட்டாசு பொருளா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.