செய்திகள்
தற்கொலை

செந்துறை அருகே காதல் தோல்வியால் என்ஜினீயர் தற்கொலை

Published On 2021-01-10 05:40 GMT   |   Update On 2021-01-10 05:40 GMT
செந்துறை அருகே காதல் தோல்வியால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள முதல் ரெயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக அரியலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர், தண்டவாளத்தில் படுத்திருந்த வாலிபரை அங்கிருந்து வருமாறு கூறி கூச்சலிட்டனர். ஆனால் அவர் வரவில்லை.

இதனால் அதிவேகமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், அந்த வாலிபர் மீது மோதியது. இதில் வாலிபரின் உடல் துண்டு, துண்டாக சிதறியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தி விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் நக்கம்பாடி காலனி தெருவை சேர்ந்த மணிவேலின் மகன் அரவிந்தன்(வயது 26) என்பதும், அவர் என்ஜினீயரிங் படித்துள்ளதும் தெரியவந்தது. மேலும் அவர் கல்லூரியில் படித்தபோது ஏற்பட்ட காதல் தோல்வியால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாகவும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கிராம மக்கள் கண்முன்னே ரெயில் மோதி வாலிபர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News