செய்திகள்
சிவகாசியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி:
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். இவரது மகன் சதிஷ்குமார் (19) விருதுநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மாரீஸ்வரி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அப்போது கல்லூரி செல்ல தயாரான மாணவன் சதிஷ்குமார், தனது சட்டையை மின்சாரத்தில் இயங்கும் சலவை பெட்டியின் மூலம் தேய்க்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.