உள்ளூர் செய்திகள்
மயிலாடும்பாறை அருகே கூட்டமாக காணப்படும் வவ்வால்கள்

வவ்வால்கள் தொல்லையால் விவசாயிகள் பாதிப்பு

Published On 2022-01-12 08:31 GMT   |   Update On 2022-01-12 08:31 GMT
தேனி மாவட்டம் வருசநாடு அருகே வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்
வருசநாடு:

மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மற்றும் இலவம் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வவ்வால்கள் கூட்டம் மயிலாடும்பாறை பகுதிக்கு படையெடுத்தது.

பகல் நேரங்களில் ஓட்டணை அருகே மூலவைகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள மருத மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இலவம், தென்னை மரங்களில் உற்பத்தியாகி உள்ள பூ, பிஞ்சுகளை உணவிற்காக சேதப்படுத்தி வருகிறது.

விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் வெடிகள் வெடித்தும், புகைமூட்டம் எழுப்பியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வவ்வால்கள் தொல்லையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வவ்வால்களை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News