செய்திகள்
அம்மா மினி கிளினிக்

அம்மா மினி கிளினிக் மூலம் 8 லட்சம் பேர் பயன் அடைந்தனர்

Published On 2021-02-09 08:24 GMT   |   Update On 2021-02-09 08:24 GMT
அம்மா மினி கிளினிக் மூலம் இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
சென்னை:

தமிழகத்தில் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் இதுவரை 893 கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிளினிக்கிலும் ஒரு டாக்டர், நர்சு ஒருவர் மற்றும் ஒரு பல்நோக்கு சுகாதார பணியாளர் ஒருவர் இருப்பார்.

இந்த கிளினிக்குகள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படுகிறது.

தினமும் சராசரியாக 30 முதல் 50 வெளி நோயாளிகள் ஒவ்வொரு கிளினிக்குக்கும் சிகிச்சை பெற செல்கிறார்கள். இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

தொற்று நோய் தவிர சிறு நோய்களுக்கான சிகிச்சைக்காக சுகாதார மையங்களில் 12 சேவைகளை நோயாளிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

புதிதாக மருத்துவர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில் சுகாதாரத்துறையின் டாக்டர்கள் இந்த கிளினிக்குகளில் பணியாற்றி வருகிறார்கள்.

புதிதாக மருத்துவர்கள் தேர்வு செய்யப்படும்போது கிளினிக் அமைந்துள்ள இடங்கள் கிராமங்கள், நகர பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

டாக்டர்களுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 200 மருத்துவர்கள், 200 நர்சுகள், 200 ஊழியர்கள் மினி கிளிளிக்குகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டாக்டர்களுக்கு ரூ.60 ஆயிரம், நர்சுகளுக்கு ரூ.14 ஆயிரம், ஊழியருக்கு ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News