செய்திகள்
டிகே சுரேஷ்

காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேசுக்கு கொரோனா: சி.பி.ஐ. அதிகாரிகள் பீதி

Published On 2020-10-07 03:05 GMT   |   Update On 2020-10-07 03:05 GMT
பெங்களூரு புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. எம்.பி. டி.கே.சுரேசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தனது வலையில் வீழ்த்தி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களை கொரோனா தாக்கி உள்ளது. கொரோனாவுக்கு மத்திய மந்திரியும், பெலகாவி தொகுதி எம்.பி.யுமான சுரேஷ் அங்கடி, பசவகல்யாண் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணராவ், மாநிலங்களை உறுப்பினர் அசோக் கஸ்தி ஆகியோர் உயிரிழந்து உள்ளனர். நேற்று முன்தினம் கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த டி.கே.சுரேஷ் எம்.பி.க்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு புறநகர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் டி.கே.சுரேஷ். இவர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் தம்பி ஆவார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த டி.கே.சுரேஷ் எம்.பி. நேற்று முன்தினம் மாலை கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.

நேற்று டி.கே.சுரேஷ் எம்.பி.யின் மருத்துவ அறிக்கை வெளியானது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் எம்.பி.யின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது டி.கே.சுரேஷ் எம்.பி. தனது வீட்டில் இருந்தார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

மேலும் சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகளை கண்டித்து தனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய ஆதரவாளர்கள் மத்தியில் டி.கே.சுரேஷ் எம்.பி. பேசினார். மேலும் நேற்று முன்தினம் இரவு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதும் டி.கே.சுரேஷ் உடன் இருந்தார். தற்போது டி.கே.சுரேசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் சி.பி.ஐ. அதிகாரிகள், காங்கிரஸ் தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் பீதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News