வேலூரில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- குடோனுக்கு சீல்
வேலூர்:
வேலூர் மாநகரில் உள்ள கடைகள், குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் உணவுப் பொருள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், இளங்கோவன், சுரேஷ் பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூர் கே.எம்.செட்டிதருவில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தட்டுகள், ஸ்பூன்கள், தெர்மாக்கோல் தட்டுகள் உள்பட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அந்த குடோனுக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த மற்றொரு கடையில் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.