செய்திகள்
க்ரைம்.

திருப்பூர் அருகே டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர்கள்

Published On 2021-10-25 07:53 GMT   |   Update On 2021-10-25 07:53 GMT
அக்கம் பக்கம் உள்ளவர்கள் கனகராஜை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் ( வயது 28). அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பிரிவிலிருந்து மாதம்புதூர் செல்லும் சாலையில் நண்பரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மோதுவது போல், அதிவேகமாக ஒரு கார் சென்றது. தள்ளி நின்ற அவர் பார்த்துப் போக மாட்டீர்களா? என சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து காரில் இருந்து  இறங்கிய 4 வாலிபர்கள் கனகராஜூடன் தகராறில் ஈடுபட்டனர். 

மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகராஜின் வயிறு, தலை, முதுகு, ஆகிய இடங்களில் குத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கனகராஜை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார்  வாலிபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கரைப்புதூர் ஓடை அருகே பதுங்கி இருந்த ஒருவனை பிடித்து விசாரித்தபோது, அவன் கத்திக்குத்து சம்பவத்தில்  ஈடுபட்ட சிவா என்கிற சிவராமன் ( 24 ) என்பது தெரியவந்தது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அவன் தற்போது பல்லடம் காமராஜர் நகர் பகுதியில் தங்கி உள்ளதும் தெரியவந்தது. 

இதையடுத்து அவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 2 கத்திகள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News