செய்திகள்
வேளாண் சட்டம், ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்
வேளாண் சட்டம் மற்றும் ஹத்ராஸ் சம்பத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டத்தை கண்டித்து பஞ்சாப், அரியானா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி புல் அறுக்க சென்ற 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உத்தரபிரதேச பாஜக அரசுக்கு காங்கிரஸ்
உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் ஹத்ராஸ் சம்பவங்களை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து வரும் 26 ஆம் தேதி நாடுமுழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாவட்ட கட்சி தலைமையகத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.