செய்திகள்
கடலூரில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்
கடலூரில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.
கடலூர்:
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு குடற் புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, மாணவிகளுக்கு குடற் புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
பின்னர் இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது:-
நாடு முழுவதும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வருகிற 28-ந்தேதி வரை 3 சுற்றுகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல் சுற்று வருகிற 19-ந்தேதி வரையிலும், 2-ம் சுற்று வருகிற 21-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரையிலும் (திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) மற்றும் 3-ம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங் கள் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் உடல் வளர்ச்சி குன்றியும், 43 சதவீதம் எடை குறைவாகவும் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 884 குழந்தைகளுக்கு 2,023 அங்கன்வாடி மையங்களிலும், 319 துணை சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது.
இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரைகளை வழங்கும் பணியில் 3 ஆயிரத்து 655 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, நகராட்சி சுகாதார அலுவலர் அரவிந்த்ஜோதி, மாவட்ட தாய்- சேய் நல அலுவலர் சசிகலா, திருப்பாதிரிப்புலியூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிறிஸ்டி மற்றும் பலர் உள்ளனர்.