செய்திகள்
23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை- பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது .
இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகாலப் பிரச்சினையில் உடனடியாக இந்தியப் பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வலியுறுத்த வேண்டும்.
மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... தசரா ஊர்வலத்திற்குள் அதிவேகத்தில் புகுந்த வாகனம்- ஒருவர் பலி