செய்திகள்
கோப்புபடம்

வேலை கிடைக்காத விரக்தியில் வி‌ஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

Published On 2021-09-11 10:58 GMT   |   Update On 2021-09-11 10:58 GMT
மதுரை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை செல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள அச்சக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

சமீபகாலமாக அச்சகத்தில் வேலை இல்லை. இதனால் வருமானமின்றி தவித்து வந்தார். இதுதவிர வசந்த குமாருக்கு குடிப்பழக்கம் உண்டாம்.

இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் மனைவி சிவசங்கரி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வசந்த குமார் வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வி‌ஷம் சாப்பிட்ட பின் அவருக்கு எதுவும் ஆகவில்லை.

இந்த நிலையில் உயிருக்கு பயந்து வசந்தகுமார் நேரடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு டாக்டரிடம் “நான் குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்து சாப்பிட்டேன். ஆனால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. எனவே நோய் பாதிப்பை தவிர்க்கும் வகையில் எனக்கு ஊசி போட்டு காப்பாற்றுங்கள்” என்று கேட்டு உள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் வசந்த குமாரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிசிக்சை அளித்தனர்.ஆனால் பலன் இல்லை. அவரது நிலைமை கவலைக்கிடமானது. இதற்கிடையில் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி வசந்த குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News