செய்திகள்
ஜிகே வாசன்

அரசு நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Published On 2020-10-08 07:19 GMT   |   Update On 2020-10-08 07:19 GMT
கொரோனா பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கைக்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா தொற்று எண்ணிக்கை 5,447ஆக இருக்கிறது. இறப்பு 67 ஆக இருக்கிறது. சென்னையில் மட்டும் தொற்று எண்ணிக்கை 1,369 ஆக உள்ளது.

சென்னையில் தற்பொழுது திடீர் என்று பத்து நாள்களுக்கு மேலாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் தொடர்ந்து நீடித்து கொண்டு இருக்கிறது. சென்னையில் இறப்பு எண்ணிக்கை தினசரி 15-ல் இருந்து 20 பேர் வரை கொரோனாவில் இறந்தவர்கள் என்ற நிலை மீண்டும் தொடர்கிறது.

அரசு பொது மக்களுக்கு பொருளாதார நிமித்தமாக பல தீர்வுகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. தங்கள் நியாயமான கருத்துக்களை சொல்லவும், எதிர்ப்பை தெரிவிக்கவும், அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.

ஆனால் இவைகள் பல நேரங்களில் பல இடங்களில் கட்டுப்பாட்டை மீறக்கூடிய நிலைகளிலேயே நடைபெறுகிறது. மக்களுக்கான போராட்டம் என்ற நிலை மாறி கொரோனாவினுடைய கோரப்பிடியில் மீண்டும் மக்களை சிக்கவைத்து விடும் சூழல் ஏற்படும் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அறிவுரை சொல்லக்கூடிய அரசியல் கட்சிகளே மறுபுறம் கொரோனா பரவலுக்கு காரணமாக ஆகிவிடக் கூடாது. ஆகவே அரசியல் கட்சிகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இதுவே நாம் நேசிக்கும் நாட்டிற்கும், மக்களுக்கு பயனுள்ளதாக அமையும், நன்மை பயக்கும். அரசியல் கட்சிகள் கொரோனா மென்மேலும் பரவாமல் தடுக்க அரசின் சட்டங்களையும் கோட்பாடுகளையும் மீறாமல் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News