செய்திகள்
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- சிறுவன் கைது
தொண்டாமுத்தூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பேரூர்:
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில், வீட்டு வாசலில் 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மதுபோதையில் சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணாததால் தாயார் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உறவினர்களுடன் சிறுமியை தேட தொடங்கினர். அப்போது சிறுவன் வீட்டில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது, உடனே கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமியை கை, கால்களை கட்டி, சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.