உள்ளூர் செய்திகள்
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்

திருப்பூர் மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது

Published On 2022-01-13 08:23 GMT   |   Update On 2022-01-13 08:23 GMT
செங்கரும்பு ஜோடி 80 முதல், 100 ரூபாய்க்கும், மஞ்சள் கொத்து, 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும், இயற்கையை வணங்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய திருநாளாகவும் பொங்கல் விளங்குகிறது. தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒருமாதம் முன்பிருந்தே மக்கள் தயாராகி வருகின்றனர்.  

பொங்கலுக்கு செங்கரும்பு, பானைகளில் மஞ்சள்கொத்து கட்டி வழிபடுவது வழக்கம். இதனால், செங்கரும்பு, பானை, மஞ்சள் கொத்து விற்பனை ஆண்டுதோறும் பொங்கலுக்கு இரண்டுநாட்களுக்கு முன்பே களைகட்ட துவங்கும். 

பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் செங்கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சள் கொத்து மற்றும் பூளைப்பூ விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியுள்ளது.

குறிப்பாக செங்கரும்பு ஜோடி 80 முதல், 100 ரூபாய்க்கும், மஞ்சள் கொத்து, 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காப்பு கட்டுவதற்கு தேவையான பூளைப்பூ, ஆவாரம்பூ மற்றும் வேப்பிலை அடங்கியவை ஒருகொத்து, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் திருப்பூர் மாநகராட்சி சார்பில் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் அணியாமல் வருபவர்களை மார்க்கெட்டுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியும் வருகின்றனர். 

இதேபோல் திருப்பூரில் முக்கிய பகுதிகளில் தற்காலிக கடைகள் அனைத்தும் உங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொருள்கள் வாங்க அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

தாராபுரம்ரோடு கன்னடம் ரோடுகளில் கோலப்பொடி மற்றும் கலர்பொடி பாக்கெட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல் ரெடிமேடு கோலப்பொடி மற்றும் எளிதாக கோலமிடும் ஆச்சு கருவிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

திருப்பூரில் உள்ள பல பனியன் நிறுவனங்கள் மற்றும் சில கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். 

இதேபோல், வடமாநிலத்தவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
Tags:    

Similar News