கோவில்கள்
அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்- திருக்காரகம்

அருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்- திருக்காரகம்

Published On 2021-12-15 06:47 GMT   |   Update On 2021-12-15 06:47 GMT
இங்கு வந்து கருணாகரப் பெருமாளை வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல, மனக்குறைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள்.
மூலவர்: கருணாகரப் பெருமாள்
தாயார்: பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார்
உற்சவர்: கருணாகரப் பெருமாள்
தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்
ஊர்: காஞ்சிபுரம்

தலவரலாறு:

திருக்காரகத்திலுள்ள கருணாகரப் பெருமாள் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு திருக்காரகம் என்று பெயர் வந்ததன் காரணத்தை அறிய முடியவில்லை. கார்க முனிவர் செய்த தவத்தின் பயனால் இறைவன் திருக்காட்சியை காட்டி அருளியது போல் தெரிகிறது.

இதன் காரணமாகவே “திருக்கார்கம்” என்று ஆனதாகவும் பிற்காலத்தில் அப்பெயர் மருவி “திருக்காரகம்” என்று ஆனதாகவும் தெரிகிறது. திருமங்கையாழ்வார் “உலகமேத்தும் காரகத்தாய்” என்று மங்களாசாசனம் செய்திருப்பதால் அக்காலத்தில் தனியாக மிக பிரம்மாண்டமான கோவில் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அக்காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சி பகை அரசர்களின் படையெடுப்பின் போது, இக்கோவில் அழிக்கப்பட்டிருக்கலாம். அழிவுற்ற ஆலயத்தின் இறைவனின் திருமேனியை மட்டும் வேறொரு கோவிலில், அதாவது தற்போது உள்ளதைப் போல சன்னிதி அமைத்து வழிபாடு செய்திருக்கலாம்.

மூலவர் தரிசனம்:

இத்தல இறைவனை கார்க முனிவர் தரிசனம் செய்துள்ளார். இங்கு மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் வாமன விமானம் ஆகும். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

அக்ராயர் என்ற அரசனுக்கு ஏற்பட்ட கொடுமையான நோய் குணமாகாமல் தவித்த பொழுது இந்த தலத்திலுள்ள புஷ்கரணியில் நீராடி கருணாகரப் பெருமாளை பிரார்த்தனை செய்தால் கொடிய நோய் விலகிவிடும் என்று சொன்னதின் பேரில் இந்ததலத்திற்கு வந்தார் அக்ராயர்.

தனக்கென்று ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் நீராடி பெருமாளை பிரார்த்தித்தார். பெருமாளும் அக்ராயருக்குத் தரிசனம் கொடுத்து அவரது தீராத நோயினை நீக்கியதாகச் செவிவவழிச் செய்தி உண்டு.

பரிகாரம்:

தீராத நோய் என்று வந்தால் மருத்துவரிடம் செல்வதை விட திருமாலிடம் சரணடைவது தான் புத்திசாலித்தனம். அக்ராயர் அப்படிச் செய்து தான் கொடிய நோயிலிருந்து குணமானார்.

தீராத நோய் கொண்டவர்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மன நோயாளிகள், எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள், அதிர்ச்சியினால் பேச முடியாமல் போனவர்கள், நரம்புத்தளர்ச்சி, தோல் வியாதி போன்ற தோல் சம்பந்தமான வியாதி உள்ளவர்கள் சரணடைய வேண்டியது இந்த கருணையே வடிவான “ஸ்ரீமந் நாராயணரான எம்பெருமான் கருணாகரப் பெருமாளைத் தான்”.

இங்கு வந்து கருணாகரப் பெருமாளை வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல, மனக்குறைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள்.

கருணாகரப் பெருமாள் :

எம்பெருமானின் திருநாமம் இத்திருக்கோவிலில் “கருணாகரப் பெருமாள்”. எம்பெருமானின் அருளையும், தரிசனத்தையும் நினைத்த மாத்திரத்திலேயே நாம் பெற்றிடலாம். அவ்வளவு கருணை மிகுந்தவன். ஏன்? எதற்காக?

உண்மையான பக்தர்கள் தன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டாலே, அவர்களுக்கு வரும் துன்பங்களையும் கண்டு தனக்கு வந்தது போல் ஏற்றுக்கொண்டு உடனே அவர்களுக்கு ஓடோடி உதவி புரிவதில் எம்பெருமானுக்கு நிகர் அவர் மட்டுமே.

தன் பக்தனுக்காக மட்டுமின்றி தன்னை நினைப்போர்க்கே கருணை செய்யும் எம்பெருமான் பூலோகத்தில் இத்திருத்தலத்தில் கருணையே உருவான “கருணாகரப் பெருமாளாக” நமக்கு அருள் செய்வதற்குக் காட்சி கொடுத்துக் கொண்டிஅருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:-  திருக்காரகம்.ருக்கிறார்.

இத்தல இறைவனை வணங்கினால் நமக்கு சகல நோய்களையும் நீக்கி, மனக்குறைகளையும் நீக்கி நல்வாழ்வு வாழ அருள்புரிவார் என்பதில் ஐயமில்லை.

ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம். உலகளந்த பெருமாள் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது இந்த திருக்கோவில். நடந்து சென்றே இந்த கோவிலை அடையலாம்.
Tags:    

Similar News