செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது- வடகிழக்கு ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் வங்கதேசம் அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் வங்கதேசம் அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கதேச கடற்பகுதியில் மையம் கொண்டிருந்தாக கூறி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வால், ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கேந்திரபாரா, ஜெகத்சிங்பூர், ஜாஜ்பூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.