செய்திகள்
ராமதாஸ்

கொரோனா கட்டுப்பாடு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-05-04 07:11 GMT   |   Update On 2021-05-04 07:11 GMT
முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்தி விட முடியும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை 20,952 என்ற புதிய உச்சத்தை நேற்று எட்டியுள்ளது. கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 750 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அதைக்கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் கவலை அளிக்கிறது.

நேற்றைய நிலவரப்படி தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சென்னையில் 6150 ஆகவும், தமிழகம் முழுவதும் 20,952 ஆகவும் அதிகரித்துள்ளன.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேர்தலுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், குடிப்பகங்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டது.

3-ம் கட்டமாக நாளை மறுநாள் முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதி, கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிகம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்பது தான் எதார்த்தம்.

முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்தி விட முடியும்.

ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் ஏழை நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை அரசு தான் ஈடுகட்ட வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதற்கான செலவில் சரி பாதியை மத்திய அரசிடம் போராடிப் பெறவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொருபுறம் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அம்மாவட்டங்களுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்கி நோயாளிகளைக் காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News