ஆன்மிகம்
அமிர்தகலசநாதர் திருக்கோவில் - சாக்கோட்டை

அமிர்தகலசநாதர் திருக்கோவில் - சாக்கோட்டை

Published On 2020-08-25 02:24 GMT   |   Update On 2020-08-25 02:24 GMT
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 131 வது தேவாரத் தலம் ஆகும். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவர் திருப்பெயர் : அமிர்தகலசநாதர்
இறைவியார் திருப்பெயர் : அமிர்தவல்லி
தல மரம் : வன்னி
தீர்த்தம் : நால்வேத தீர்த்தம்
வழிபட்டோர் : சாக்கியநாயனார், பிரம்மா
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்

தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 131 வது தேவாரத் தலம் ஆகும். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.

சாக்கியநாயனார்:

காஞ்சிபுரம் அருகே மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலை கடக்க சிவநெறியே உயர்ந்தது என்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன், யாரும் அறியாமல் சிவபூஜையும் செய்து வந்தார்.

எப்போதும் சிவபூஜை முடித்த பின்பு தான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர், ஒரு நாள் வெளியே சென்ற போது வழியில் ஒரு சிவலிங்கம் வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்ட அவருக்கு அந்த இடத்தில் பூஜைக்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது.

சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், அவர் விசியெறிந்த கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் இறைவன் ஒருவருக்குத் தான் இவர் உணமையான பக்தியால் இவ்வாறு செய்கிறார் என்பது புரியும்.

இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கினார். சாக்கிய நாயனார் வழிபட்ட தலமாதலால் சாக்கோட்டை எனப்பட்டது.

உலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது. பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். அம்மன் தவம் செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. விசேஷமான தெட்சிணாமூர்த்தி உள்ளார். லிங்கோத்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார்.

அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு.

கோவில் அமைப்பு:

இது ஒரு கிழக்கு நோக்கிய கோவில். முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் உள்ள ஒரு நுழைவாயில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. நுழைவாயிலுக்கும் 3 நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத்தக்கது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார்.

இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

சிறப்புக்கள் :

அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி சிறப்பு. வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன். சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

போன்:  9865306840, 9788202923

அமைவிடம் :

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்

இவ்வாலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.
Tags:    

Similar News