செய்திகள்
முஸ்தாபிஜூர் ரகுமான்

ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூருக்கு அனுமதி மறுப்பு

Published On 2020-09-05 19:22 GMT   |   Update On 2020-09-05 19:22 GMT
ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
டாக்கா:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி (இங்கிலாந்து) காயம் காரணமாக விலகினார். இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சொந்த விஷயம் காரணமாக ஒதுங்கினார்.

இதனை அடுத்து இந்த இரு அணிகளும் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை தங்கள் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து அணுகி இருந்தன. ஆனால் அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் அக்ரம்கான் கருத்து தெரிவிக்கையில், ‘ஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு அழைப்பு வந்து இருந்தது.

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் அணி இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அவர் எங்களுக்கு முக்கியமான வீரர் என்பதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை’ என்றார். 24 வயதான முஸ்தாபிஜூர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக 2018-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
Tags:    

Similar News