செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் உள்ள விநாயகர் சன்னதி (அம்புகுறியிடப்பட்டுள்ளது)கோபுர சிற்பங்களில் சீரமைக்கும் பணி

தஞ்சை பெரிய கோவிலில் விநாயகர் சன்னதி கோபுர சிற்பங்கள் சீரமைக்கும் பணி

Published On 2019-11-16 18:25 GMT   |   Update On 2019-11-16 18:25 GMT
தஞ்சை பெரிய கோவிலில் விநாயகர் சன்னதி கோபுரத்தில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது.

இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம் ஆகியவை சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெருவுடையார் சன்னதிக்கு மேல் கட்டப்பட்டுள்ள 216 அடி உயரம் கொண்ட கோபுரம் சுத்தப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோபுரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இலகுவான ரசாயனம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. கோவிலின் வளாகத்தில் கன்னி மூலையில் பெரிய விநாயகர் சிலை உள்ளது. இந்த சன்னதியின் வாசல்படியில் உள்ள மராட்டிய கல்வெட்டானது, இந்த பெரிய விநாயகர் சிலையை மராட்டிய மன்னன் சரபோஜி மகாராஜா பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறது. இந்த விநாயகர் சன்னதியின் மேல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சன்னதியை சுற்றிலும் நந்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவைகள் செங்கல், மண், சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டவையாகும். கோபுரத்தில் உள்ள விநாயகர் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் சிதிலம் அடைந்து உள்ளன. சன்னதிக்கு மேல் உள்ள விநாயகர் சிலையில் தும்பிக்கை இல்லாமல் காணப்படுகிறது. கோபுரத்தில் பல இடங்களில் சிலைகள் விரைவில் சேதம் அடையும் நிலையில் உள்ளது. விநாயகர் சன்னதி கோபுரம், ரசாயன கலவை மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சன்னதி கோபுரத்தில் சிதிலமடைந்துள்ள சிற்பங்களை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி தற்போது விநாயகர் சன்னதி கோபுரத்தில் சிற்பங்களை சீரமைக்கும் பணியில் சிற்பிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கோபுரத்தை சுற்றிலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிற்பங்கள் சீரமைக்கும் பணி வெளியே தெரியாதபடி துணியால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று முருகன் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, அம்மன் சன்னதி, நடராஜர் சன்னதி ஆகியவற்றிலும் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட உள்ளது. மேலும் பெரியகோவில் சுற்றுச்சுவரில் தலையின்றி காணப்படும் நந்தி சிலைகளையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News