செய்திகள்
தூக்குக் கயிறு

பாலியல் குற்றங்களை தடுக்க ஒரே வழி மரணதண்டனை மட்டுமே - காங்கிரஸ் மகளிர் அணி வலியுறுத்தல்

Published On 2019-12-10 10:18 GMT   |   Update On 2019-12-10 10:18 GMT
நாட்டில் பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க ஒரே வழி குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவது தான் என கோவா காங்கிரஸ் மகளிர் அணி வலியுறுத்தி உள்ளது.
பனாஜி:

பெண்களுக்கெதிராக நாட்டில் நடந்து வரும் பாலியல் குற்றங்களை பற்றி அனைவரும் அறிந்ததே. உன்னாவ், ஐதராபாத் போன்று இன்னும் எத்தனையோ கொடூர சம்பவங்கள் பெண்களுக்கெதிராக அரங்கேறி வருகின்றன.

ஐதராபாத் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் கொல்லப்பட்டதால் இவ்வழக்கில் உடனடியாக நீதி கிடைத்தது என பொதுமக்கள் அனைவரும் கொண்டாடினர். ஆனால் என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க ஒரே வழி குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிப்பது தான் என கோவா பிரதேச மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரதிமா கோடின்ஹோ கூறினார்.

‘சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்குகள் பல உள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் பெண்கள் வீதிகளில் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. இது அரசியல் அறிக்கை அல்ல, உண்மை நிலை.



பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள், பொது இடத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என உறுதிபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது தொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்.

இதுபோன்ற குற்றங்களைச் செய்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வக்கிரக்காரர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது’ என பிரதிமா கோடின்ஹோ தெரிவித்தார்.

Tags:    

Similar News