உள்ளூர் செய்திகள்
மூலப்பொருட்கள் விலை உயர்வால் திருப்பூரில் சிறு, குறு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பு
கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பெரும்பாலான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, காஜாபட்டன் உள்ளிட்ட ஜாப்ஒர்க் துறைகளை சார்ந்தே இயங்குகின்றன.
இந்தநிலையில் நூல் விலை உயர்ந்துள்ள நிலையில் பின்னலாடை துறை சார்ந்த அனைத்து வகை ஜாப்ஒர்க் நிறுவனங்களும் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்திவிட்டன. கடந்த 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இது குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி துறையினரை கவலை அடையச்செய்துள்ளது.
இதுகுறித்து ‘டீமா’ தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு என உள்ளது. இப்போது நூல் விலை, அனைத்து ஜாப்ஒர்க் கட்டணங்களும் உயர்ந்து பின்னலாடை துறையினரை பாதிக்க செய்துள்ளது. ஆடை உற்பத்தியின் அனைத்து கட்டமைப்புகளையும் தன்னகத்தே கொண்ட பெரிய நிறுவனங்கள் நெருக்கடியான சூழல்களை எளிதாக சமாளித்து விடுகின்றன.
வங்க தேசம், கம்போடியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து குறைந்த விலைக்கு ஆடை தயாரிப்பவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வர்த்தகர்கள் ஆர்டர்களை வழங்குகின்றனர். திருப்பூர் பின்னலாடை துறையை பொருத்தவரை 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே உள்ளன. மூலப்பொருள், ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வு, சிறு, குறு நிறுவனங்களை கடுமையாக பாதிக்க செய்கிறது.
உற்பத்தி செலவினம் அதிகரிப்புக்கு ஏற்ப சிறு, குறு ஏற்றுமதி நிறுவனங்களால் ஆடைவிலையை உயர்ந்த முடிவதில்லை. இதேநிலை தொடர்ந்தால் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. எனவே நூற்பாலைகள், நூல் விலையை, மேலும் கிலோவுக்கு ரூ.40 குறைக்க வேண்டும். இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.