ஆன்மிகம்
சுப்பிரமணியசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2021-11-12 04:58 GMT   |   Update On 2021-11-12 04:58 GMT
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் 19-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவிலில் முருகப்பெருமான் தனது தந்தை சிவனுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த சிவகுருநாதனாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் ஆண்டுகளின் தேவதைகளும் இக்கோவிலின் திருப்படிகளாக அமையப்பெற்று தமிழ்க்கடவுளான முருகனுக்கு சேவை செய்து வருவதாக ஐதீகம்

பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தின்போது சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 15-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 19-ந் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத்தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News