செய்திகள்
பேனர் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் நேரம் இது -ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி
சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் விபத்துக்குள்ளாகி சுபஸ்ரீ பலியானது குறித்து ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அண்ணாமலை. தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான இவர், பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார்.
தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வந்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப்பெற்றார். இவர் கடந்த மே மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
A young techie in Chennai was fatally knocked down today by a political banner that fell on her and later by a lorry.All she did was to travel in a public road.She must have been full of life and sadly we failed her.Time to put an end to this banner culture #WhoKilledSubhasree
— K.Annamalai (@annamalai_k) September 13, 2019
இந்நிலையில் ராஜினாமா செய்த ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் லாரியில் சிக்கி பலியான சுபஸ்ரீயின் மரணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அந்த ட்வீட்டில், ‘இளம் எஞ்சினீயர், சென்னையில் அரசியல் கட்சி பேனர் சரிந்து விழுந்து, பின்னர் லாரியில் சிக்கி பலியானார்.
சுபஸ்ரீ நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், நாம் அவரை இழந்துவிட்டோம். பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இது’ என உருக்கமாக குறிப்பிட்டு, #WhoKilledSubhasree எனும் ஹேஷ்டாக்குடன் பதிவிட்டுள்ளார்.