செய்திகள்
தமிழக போலீசார்

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்

Published On 2021-02-20 05:21 GMT   |   Update On 2021-02-20 05:21 GMT
தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நின்று வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

தேர்தலையொட்டி 54 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகள் முடிந்ததும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

ஏற்கனவே அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் ரவுடிகள், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் உள்ளனர். இவர்கள் அனைவருமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கிடையில் வருகிற 25-ந்தேதி 45 கம்பெனி துணை ராணுவப் படைகள் வருகின்றன.

வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப துணை ராணுவப்படை கோரப்படும். மாநில அரசின் வேண்டுகோளின் அடிப்படையில் துணை ராணுவப் படை அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் இந்த முறை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே துணை ராணுவப்படைகள் வருகிறது. கடந்த தேர்தல்களில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் பெருமளவு நடந்தன. நாடு முழுவதும் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகிறது.

சென்னைக்கு வர இருக்கும் துணை ராணுவப்படையினரில் சென்னையில் மட்டும் 12 கம்பெனி படையினர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அதாவது ஒவ்வொரு துணை ஆணையரின் கீழும் 3 கம்பெனி வீதம் 4 மண்டலங்களுக்கும் இந்த 12 கம்பெனி படையினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள். மீதமுள்ள 33 கம்பெனி துணை ராணுவப்படையினரும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்படுவார்கள்.

தேவைக்கேற்ப மேலும் கூடுதலாக துணை ராணுவப் படையினர் அழைக்கப்பட உள்ளனர்.
Tags:    

Similar News