செய்திகள்
கேஎஸ் அழகிரி

எங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

Published On 2021-01-20 07:47 GMT   |   Update On 2021-01-20 07:47 GMT
மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர்:

ராகுல்காந்தி எம்.பி. வருகிற 23-ந் தேதி முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு திருப்பூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் வருகை கொங்கு மண்டலத்தில் எழுச்சிகரமானதாக இருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை விட 5 மடங்கு அதிக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பொதுமக்களை சந்திக்க வரும் அவர் கோவையில் தொழில்துறையினருடனும், திருப்பூரில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

ராகுல் மதுரை வந்தபோது கூட்டணி கட்சியினரை சந்திக்கவில்லை. தற்பாது சந்திப்பாரா? என கேட்கப்படுகிறது. அவர் பொதுமக்களை சந்திக்கத்தான் வருகிறார். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி தலைவர்களை சந்திப்பார்.

நடிகர் ரஜினிகாந்தை காங்கிரசுக்கு அழைத்தோம். ஆனால் பாரதிய ஜனதாவின் அழுத்தம் அவரை ரத்த அழுத்தம் வரை கொண்டு சென்று விட்டது. ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரசுக்கு உண்டு. தி.மு.க. கூட்டணியோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை.


மதசார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்போம். மிகப்பெரிய அணியாக இருக்கும் எங்களுடன் அவர் சேர வேண்டும். பிரிந்து நின்றால் அது ஓட்டுக்களை சிதறடிக்கும்.

புதுச்சேரியில் எத்தகைய அரசியல் சூழல் நிகழ்ந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அங்கு நண்பர்களுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம். தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம்.

அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர், கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பின்னிலைக்கு வந்து விட்டார். அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோபைடன், தடுப்பூசியை தனக்கு முதலில் போட்டுக்கொண்டார். இதேபோல் நமது பிரதமரும், போட்டிருந்தால் சந்தேகத்துக்கு இடம் இருந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News