தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர் விவரங்களை லீக் செய்த புதிய பிழை
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனரின் தனிப்பட்ட விவரங்களை மற்றவர் இயக்க வழி செய்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. #Messenger
ஃபேஸ்புக் மெசஞ்சரில் இருந்த பிழை பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளங்கள் இயக்க வழி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இவை பயனர் யாருடன் சாட் செய்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் இந்த பிழையை சரி செய்து விட்டது என்றாலும், மெசஞ்சரின் வெப் வெர்ஷன் வலைதளங்களுக்கு பயனர் சாட் செய்யும் விவரங்களை வழங்கியதாக சைபர்செக்யூரிட்டி நிறுவன ஆராய்ச்சியாளரான ரோன் மசாஸ் தெரிவித்தார். இவர் பிழை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பினார்.
2018 ஆம் ஆண்டு மசாஸ் மற்றும் அவரது குழுவினர் ஃபேஸ்புக் ப்ரோஃபைல்களில் இருந்து பயனர் விவரங்களை வலைதளங்கள் இயக்கிய பிழையை கண்டறிந்து தெரிவித்தார். இது சைடு-சேனல் அட்டாக் என அழைக்கப்படுகிறது. பிரவுசர் சார்ந்த சைடு-சேனல் அட்டாக் இன்றும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
ஃபேஸ்புக், கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்த விவகாரத்தை கவனிக்க துவங்கியிருக்கும் நிலையில், இன்னும் பலருக்கு இதுபற்றிய விவரம் அறியாமல் இருப்பதாக மசாஸ் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை சர்வதேச சந்தையில் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் வாட்ஸ்அப் சேவையை போன்று ஃபேஸ்புக்கில் பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதற்கென ஃபேஸ்புக் தனி பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாகவும், இதில் தனிப்பட்ட உரையாடல்கள், என்க்ரிப்ஷன், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.