தொழில்நுட்பம்

உடனே அப்டேட் செய்யுங்க - பயனர்களை எச்சரிக்கும் வாட்ஸ்அப்

Published On 2019-05-15 05:12 GMT   |   Update On 2019-05-15 05:12 GMT
உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 


வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் சுமார் 150 கோடி பேரும் உடனடியாக செயலியை அப்டேட் செய்ய அந்நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது. 

முன்னதாக ஹேக்கர்கள் கைவரிசை காரணமாக வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர் ஸ்மார்ட்போன்களில் ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆகியிருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஸ்பைவேர் பயனருக்கு தெரியாமல் அவர்களது ஸ்மார்ட்போனின் கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை ரகசியாக இயக்குவதோடு அவர்களது குறுந்தகவல், லொகேஷன் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ஸ்பைவேர் இன்ஸ்டால் ஆனது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பிழையை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பயனர்கள் தங்களது செயலியை உடனடியாக அப்டேட் செய்ய அந்நிறுவனம் தனது பயனர்களை வலியுறுத்தி வருகிறது.



“மொபைல் சாதனங்களில் சேமிக்கப்பட்ட விவரங்களை ஸ்பைவேர் சேகரிக்காமல் இருக்கச் செய்யவே இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. எங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சந்தையில் முன்னணி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஸ்பைவேரை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சைபர் நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பைவேர் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது. இது வாட்ஸ்அப் அழைப்பை பயனர் ஏற்றாலும், ஏற்கவில்லை என்றாலும் பயனர் மொபைல்களில் இன்ஸ்டால் ஆகி இருக்கிறது.

முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த ஸ்பைவேர் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

ஸ்பைவேர் தாக்குதல் பற்றி விசாரணை துவங்கப்பட்டு இருப்பதாகவும், விசாரணைக்கு உதவ அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News